முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA கண்டனம்!


இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழர் இன படுகொலைகள் துயரம் நிறைந்தவை.

அதன் கண்ணீர் நினைவுகளை தமிழ் உலகம் ஆங்காங்கே ஆவணப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் ஒன்று பேரழிவை நினைவூட்டும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது.

அது போல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணும் அந்த துயரத்தை கூறிக் கொண்டிருந்தது.

நேற்று இரவோடு இரவாக இலங்கை அரசு அதை இடித்து சேதப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

அந்த நினைவு தூணை மீண்டும் அதே இடத்தில் எழுப்பிடுவதே நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.

இவ்விஷயத்தில் இலங்கை அரசு பேரினவாத உணர்வோடு அணுகாமல், சிறுபான்மை தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி.
09.01.2021